Ads Here

01 ஜூன், 2022

வினா மற்றும் விடை வகைகள், பொருள்கோள்கள் (10ஆம் வகுப்பு TN SCERT)

 வினா, விடை வகைகள், பொருள்கோள்

பல்வேறு சூழல்களில் வினாக்கள் வினவுகிறோம்; விடைகள் கூறுகிறோம். மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும்கூட இருக்கிறது. அவற்றைப் பற்றி நன்னூலார் விளக்கியிருக்கிறார். 

வினாவகை 

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை 
ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார். 
- நன்னூல், 385. 
அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்று வினா ஆறு வகைப்படும்.

அறிவினா
  • தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது. 
  • மாணவரிடம், 'இந்தக் கவிதையின் பொருள் யாது?' என்று ஆசிரியர் கேட்டல். 
அறியா வினா
  • தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது. 
  • ஆசிரியரிடம், 'இந்தக் கவிதையின் பொருள் யாது?' என்று மாணவர் கேட்டல்.
ஐய வினா
  • ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது. 
  • 'இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?' என வினவுதல்.
கொளல் வினா
  • தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது. 
  • 'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?' என்று நூலகரிடம் வினவுதல்.
கொடை வினா
  • பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது. 
  • 'என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?' என்று கொடுப்பதற்காக வினவுதல்.
ஏவல் வினா
  • ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது. 
  • "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல். 

விடை வகை

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் 
உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் 
இனமொழி எனும் எண் இறையுள் இறுதி 
நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப.
- நன்னூல், 386.

சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும். 

முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம். 

சுட்டு விடை

  • சுட்டிக் கூறும் விடை.
  • 'கடைத்தெரு எங்குள்ளது?' என்ற வினாவிற்கு, 'இப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்.

மறை விடை

  • மறுத்துக் கூறும் விடை.
  • 'கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் 'போகமாட்டேன்' என மறுத்துக் கூறல். 

நேர் விடை

  • உடன்பட்டுக் கூறும் விடை.
  • 'கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல். 

ஏவல் விடை

  • மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை. 
  • 'இது செய்வாயா?' என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது.

வினா எதிர் வினாதல் விடை

  • வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது. 
  • 'என்னுடன் ஊருக்கு வருவாயா?' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது. 

உற்றது உரைத்தல் விடை

  • வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல். 
  • 'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது. 

உறுவது கூறல் விடை

  • வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல். 
  • 'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது. 

இனமொழி விடை

  • வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல். 
  • "உனக்குக் கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது.

பொருள்கோள் 

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் 'பொருள்கோள்' என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும். 

அவை ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், விற்பூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறிபாப்புப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆகியன. இவற்றுள் ஆற்றுநீர்ப் பொருள்கோள், நிரல் நிறைப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகியவற்றை அறிந்து கொள்வோம். 

1. ஆற்றுநீர்ப் பொருள்கோள் 

எடுத்துக்காட்டு : 
சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் 
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் 
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் 
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. 
- சீவகசிந்தாமணி 

நெற்பயிர், கருவுற்ற பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு, செல்வம் சேர்ந்தவுடன் பண்பற்றமக்கள் பணிவின்றித் தலை நிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன. 

'நெல்' என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்களைப் பெற்றுக் 'காய்த்தவே' என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்தது. 

பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' ஆகும். 

மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள் 
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே.
- நன்னூல் : 412 

2. நிரல்நிறைப் பொருள்கோள் 

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது 'நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும். 

இது முறை நிரல்நிறைப் பொருள்கோள், எதிர் நிரல்நிறைப் பொருள் கோள் என இருவகைப்படும். 

(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள் 

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும். 

எடுத்துக்காட்டு:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது. 
- குறள் : 45.

இக்குறளில் அன்பு, அறன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி, அவற்றிற்குரிய விளைவுகளாக பண்பு, பயன் என்று வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றை இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும் அதன் பயன், அறன் என்றும் பொருள்கொள்ள வேண்டும். எனவே, அன்புக்குப் பண்பும் அறத்துக்குப் பயனும் பயனிலைகளாக - நிரல்நிறையாக - நிறுத்திப் பொருள்கொள்வதால், இப்பாடல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும். 

(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் 

செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் 'எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும். 

எடுத்துக்காட்டு :
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 
கற்றாரோடு ஏனை யவர். 
- குறள் : 410.

இக்குறளில் முதல் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, அடுத்த அடியில் பயனிலைகளாகக் கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளார். அவற்றைக் கற்றார் மக்கள் என்றும், கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ள வேண்டும். எனவே, இக்குறள் 'எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும். - நன்னூல் : 414. 

3. கொண்டுகூட்டுப் பொருள்கோள் 

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும். 

எ.கா. 
ஆலத்து மேல குவளை குளத்துள 
வாலின் நெடிய குரங்கு. 
- மயிலைநாதர் உரை.

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளை - என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும். 

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை 
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே. 
- நன்னூல்: 417.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக